மோடி வருகையால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி Modi arrival tamil political changes Pon.Radhakrishnan interview
திருச்சியில் இன்று நடைபெறும் பாரதீய ஜனதா கட்சியின் இளந்தாமரை மாநாட்டில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதில் கலந்து கொள்வதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து பாரதீய ஜனதா தொண்டர்கள் திருச்சிக்கு வந்துள்ளனர்.மாநாடு நடைபெறும் திருச்சி ஜி.கார்னர் பகுதியில் டெல்லி செங்கோட்டை வடிவில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. 150 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட மேடையின் அருகில் 2 சிறிய மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திடலை சுற்றிலும் தமிழ் அன்னை பா.ஜனதா மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரது கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மேடைக்கு நேர் எதிரில் நெடுஞ்சாலையில் 150 அடி உயரத்தில் விவேகானந்தர், மற்றும் மோடியின் கட் அவுட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு திடலை இன்று காலையில் தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பொதுச் செயலளார் எச்.ராஜா, ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–
இன்று நடைபெறும் இளந்தாமரை மாநாட்டில் பாரதீய ஜனதா தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து விண்ணப்பங்கள் மூலம் எதிர்பார்த்ததைவிட அதிகம் பேர் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
நேற்று இரவு வரை ஆன்லைனில் 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
3 லட்சத்துக்கும் குறையாமல் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.
மாநாட்டு திடலில் அதிக பட்சமாக 1 லட்சம் பேர்தான் அமர முடியும். எனவே அவசரம் அவசரமாக மாநாட்டு திடலின் எதிரே 5 ஏக்கர் தனியார் நிலத்தை தொண்டர்களின் வசதிக்காக தயார் செய்துள்ளோம். அங்கிருந்தபடி மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்க்க எல்.இ.டி. திரைகளும் பொறுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு வழங்குவதற்கு 7 லட்சம் தண்ணீர் பாக்கெட்டுகளையும் தயார்படுத்தி வைத்துள்ளோம்.
மாநாட்டுக்கு வருபவர்கள் வாகனங்களை பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக 9 இடங்களில் மையங்கன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற 500 தொண்டர்கள் சீருடையுடன் பொதுமக்களை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்வார்கள்.
மாநாட்டுக்கு வரும் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்களுக்கு தமிழக பாரம்பரிய மங்கள வாத்தியங்களுடன் பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் மோடியின் அலை வீசுகிறது. அவர் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சியை தருவார் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது. மோடியின் வருகைக்கு பின்னர் தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment